சூர்யாவிடம் இதை எதிர்பார்க்க முடியாது!கார்த்தி

கார்த்தி  ‘அக்கா காட்டும் பாசத்தை அண்ணனிடம் எதிர்பார்க்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.இந்தப் படத்தில், சயீஷா சைகல் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில்  பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ஆகியோர் கார்த்தியின் மாமன் மகள்களாக நடித்துள்ளனர். சத்யராஜ், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், பானுப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் படப்பிடிப்பை அதிகாலை 6 மணிக்கு ஆரம்பித்தால், இரவு தாமதமாகத்தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் திட்டமிட்டு, சரியாகச் செய்து முடித்தார். இந்தப் படத்துக்காக அவர் 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

பட்டணத்தில் வேலைசெய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்யவைக்கும் படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இருக்கும். நான் முதன்முறையாக டி.இமான் இசையில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் நல்ல பாடல்கள் உள்ளன.

நான், அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துகூடப் பார்த்தது இல்லை. அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன்முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால், நமக்கு காஃபி போட்டுக் கொடுப்பார். ஆனால், அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்” என்று ஜாலியாகப் பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment