சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து…!!

தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார் என கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடத்தபட்ட சிலைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருப்பதாலும், வெளிநாட்டு தொடர்புகளையும், பிற மாநில தொடர்புகளையும் அவற்றை விசாரித்து மீட்க ஏதுவாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்குகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரித்து குற்ற பத்திரிக்கை பதிந்துள்ள வழக்குகளை தவிர,

தமிழகத்தில் நிலுவையில் உள்ள இதர சிலை கடத்தல் வழக்குகளையும், அரசாணைக்கு பிறகு பதியப்படும் வழக்குகளையும்
சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை தடை செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இத்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசின் இந்த அரசாணைக்கு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தொடர்பாக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் விசாரணை நடத்த உள்ளதாலேயே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்ததாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அன்றைய தினம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். முன்னதாக,சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக யானை ராஜேந்திரன் புகார் தெரிவித்தார்.

அது அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு அளித்த தீர்ப்பில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு குழு தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நீடிப்பார் என்றும், அவர் தற்போது வாங்கிய ஊதியம் உட்பட இதர சலுகைகள் அனைத்தும் அவருக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும், அரசு அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அவர் பணி செய்த அலுவலகத்தில் இருந்தே பணியை தொடரலாம் என்றும் அவருக்கு தேவையான அதிகாரிகள் யார் என அவர் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவருக்கு தேவைப்பட்டால் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பொன்.மாணிக்கவேலுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிபிஐயும், மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பொன் மாணிக்கவேல் யாருக்கும் சிலை கடத்தல் தொடர்பான விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்றும் விவரங்களை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதுமானது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment