சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்…சென்னை ட்ரெக்கிங் கிளப் திடீர் விளக்கம்?

சர்ச்சையை கிளப்பும் டிரெக்கிங் கிளப்…சென்னை ட்ரெக்கிங் கிளப் திடீர் விளக்கம்?

மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் விவசாயிகள் புற்களை எரித்ததே குரங்கணி மலையில் காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என  தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். 39 பேர் கொண்ட குழுவில் 3 பேர் நீங்கலாக 36 பேர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றம் சென்ற 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். காட்டுத் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் அமைப்பு  ஃபேஸ்புக்கில் விரிவாக பதிவிட்டுள்ளது. அதில் தீ விபத்தால் நேர்ந்த விபரீதத்திற்கு தாங்கள் மனமாற வருந்துகிறோம். இந்த நேரத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்த கிளப் தெரிவித்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மலையேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், 27 பேர் கொண்ட மலையேற்றக் குழுவை வழிநடத்தி சென்ற நிஷா, திவ்யா, அருண் மற்றும் விபின் ஆகிய நால்வரும் அனுபவம் மிக்கவர்கள் என்று சென்னை டிரெக்கிங் கிளப் தெரிவித்துள்ளது. மேலும் உள்ளூரை சேர்ந்த வழிகாட்டி ஒருவரின் துணையுடன்தான் மலையேற்றம் நடந்ததாகவும் அந்த கிளப் கூறியுள்ளது.

மார்ச் 10ஆம் தேதி குரங்கணி மலையேற்றத்திற்கு பயணமானதாகவும் இதற்காக மலையடிவாரத்தில் உள்ள செக் போஸ்ட்டில் பாஸ் பெற்றதாகவும் பதிவிட்டுள்ளனர். குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு வழக்கமாக உள்ளூர் கிராம மக்களும், மலையேற்றத்துக்கு செல்வோரும் பயன்படுத்தும் பாதையில் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மார்ச் 10ஆம் தேதி கொழுக்குமலையை அடைந்த குழுவினர் திட்டமிட்டபடி இரவு அங்கேயே தங்கியதாகவும் மார்ச் 11ஆம் தேதி மலையில் இருந்து கீழறங்க தொடங்கியபோது  பாதி தூரம் வந்த பிறகுதான் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் மலையடிவாரத்தில் புற்களை எரித்ததால் தீப்பற்றியதாக தெரிகிறது என்றும் சென்னை டிரெக்கிங் கிளப் தெரிவித்துள்ளது. அப்போது பலத்தக் காற்று வீசியதால் தீ மளமளவென பரவி மலையேற்ற குழுவினரை நெருங்கியதாக அப்பதிவில் கூறப்பட்டுள்ளது. தீயை பார்த்து வேறு பக்கமாக சென்ற போது அங்கும் தீ பரவியதாகவும் தப்பிக்க வேறு வழியே இல்லாத நிலை ஏற்பட்டதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. மலையேற்றத்தில் ஈடுபட்ட திவ்யா முத்துக்குமரன் மிகவும் போராடி 3 பேரை காப்பாற்றி, பின்னர் தன் உயிரை பறிகொடுத்ததாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை டிரெக்கிங் கிளப் வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் 3 ஆண்டுகளுக்கு முன் சென்னை வெள்ளத்தின் போது ஏராளமான மக்களை வெள்ளத்திலிருந்து மீட்டதாகவும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *