கோழிப்பண்ணையில் சிறுமியை கற்பழித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!

பங்காருபாளையம் அருகில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது.

அங்கு, கூலி வேலை செய்பவர்களுக்கு பண்ணை நிர்வாகம் ஒரு கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளது. அந்தக் கொட்டகையில் அனைவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். அதில் 5 வயது சிறுமியும் தனது பெற்றோருடன் தங்கியிருந்தாள். அதே கொட்டகையில், பங்காருபாளையம் மண்டலம் சும்மிந்தபாளையம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 35) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி அந்தக் கொட்டகையில் தங்கியிருந்த அனைவரும் பங்காருபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு, நள்ளிரவில் கொட்டகைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது 5 வயது சிறுமி தூங்கி விட்டாள். அந்தச் சிறுமியை சுவாமிநாதன் தோளில் தூக்கி வந்துள்ளார்.

கோழிப்பண்ணை வந்ததும் அனைவரும் கொட்டகைக்குச் சென்று விட்டனர். ஆனால் சுவாமிநாதன், தூக்கக்கலக்கத்தில் இருந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள வனப்பகுதிக்குத் தூக்கிச்சென்று, அவளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, பிணத்தை அங்கேயே வீசி சென்றுள்ளார்.

பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோழிப்பண்ணைக்கு அருகில் வனப்பகுதியில் சிறுமி பிணமாக கிடந்ததைப் பார்த்து கதறினர். இதுபற்றி பங்காருபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுவாமிநாதன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று பிணத்தை வனப்பகுதியில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சுவாமிநாதனை போலீசார் கைது செய்து, அவர் மீது சித்தூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, சுவாமிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment