பெரியகுளம்: பத்து நாள் தடை நீங்கியதையடுத்து கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலையடிவாரப்பகுதியில் பெய்யும் மழையால் நீர்வரத்து இருக்கும். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரியகுளம், கொடைக்கானல் பகுதியில் கோடைமழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அருவியில் தண்ணீர் அபாய அளவை தாண்டியதால் பாதுகாப்பு கருதி கடந்த 10 நாட்களாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இதனால் கோடைகால விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அருவியில் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தடையால் ஏமாற்றமடைந்தனர்.அருவியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையின் நேற்று முன்தினம் பிற்பகலில் அனுமதி அளித்தனர். இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் நேற்று குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்