உலக சுகாதார நிறுவனம் சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட “எபோலா” தடுப்பு மருந்தை காங்கோவுக்கு அனுப்பியது!

காங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

காங்கோவில் எபோலோ நோய் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42 பேருக்கு எபோலா நோய் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பாதிப்பின் போது சோதனை முறையில் வழங்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் காங்கோவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து முதல் கட்டமாக அனுப்பப்பட்ட 4 ஆயிரம் பேருக்கான மருந்துகள் காங்கோவைச் சென்றடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எபோலா உயிர்க் கொல்லி நோய்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment