"ஆட்டோ ஓட்டுநர் பலி" அனைத்துக் கட்சியினர் போராட்டம்..!!

எருமாடு பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் பலியான நிலையில், மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், எருமாடு கூளால் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று புதனன்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அச்சமயம் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் அபூட்டி (55) என்பவர் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த அபூட்டி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். போக்குவரத்துக்கு அபாயகரமாக உள்ள மரங்கள் அனைத்தையும் கண்டறிந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி எருமாடு பஜாரில் அனைத்து கட்சியினர் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போக்குவரத்திற்கும், குடியிருப்புக்கும் அபாயகரமாக உள்ள அனைத்து மரங்களும் அரசு செலவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த போராட்டத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எம்.திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், ஏரியா கமிட்டி செயலாளர் கே.ராஜன், கே.ராஜ்குமார், எ.யோகண்ணன், நௌபல், காங்கிரஸ் கட்சியின் வர்க்கி, குட்டி கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராஜேந்திர பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment