இன்று முதல் பள்ளிகள் திறப்பு… 50% மாணவர்களுடன் நெறிமுறைகளை பின்பற்றி துவக்கம்…

கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், இன்று(செப்டெம்பர்,21) திறக்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று ஒன்பது முதல் பன்னிரெண்டாம்  வகுப்புகள் வரை துவங்குகின்றன. இதில் முதற்கட்டமாக, 15 நாட்களுக்கு, வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப, வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல; விரும்பும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பாடம் கற்றுக் கொள்ளலாம். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். இதேபோல் டில்லி, குஜராத், கேரளா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, பீஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன.

author avatar
Kaliraj