விளையாட தொட்டில் கட்டிய புடவையில் கழுத்து இறுக்கி சிறுவன் உயிரிழப்பு!

புடவைவயால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுவன் கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தாங்கல் எனும் தெருவை சேர்ந்த ரகுபதி ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஆறாம் வகுப்பு படிக்க கூடிய பாலாஜி என்னும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் ரகுபதி வெளியே கடைக்கு சென்றிருந்த போது வீட்டில் அவரது மகன் பாலாஜி புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் கோவிந்தராஜ் அவர்களின் வீட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது சிறுவன் பாலாஜி புடவையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து இறுக்கி மயங்கி கிடந்ததை கண்டு அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் பாலாஜி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்பின் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபொழுது கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
author avatar
Rebekal